mandag 2. mars 2009

HOW TO PROGRESS IN ECONOMIC DEVELOPMENT....!!! A PERSONAL EXAMPLE!!!

வாஷிங் பவுடர் நிர்மா‏

Til: beyouths groups (beyouths@yahoogroups.com)
Kopi: venugopalan.rengan@gmail.com


(2006-ம் ஆண்டுக்கான ’The Economic Times,' சிறப்பிதழில் வெளியான
கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

எனது கைகள் இப்போது ஓய்வு ஒழிவற்று இருக்கின்றன. ஆகவே, எகணாமிக் டைம்ஸ்
சிறப்பிதழில், என்னை ஏதாவது எழுதுமாறு என்னிடம் யோசனை தெரிவித்தபோது,
எனக்கு சந்தேகமாக இருந்தது. இத்தனை வருடங்களாக ஊடகங்களிலிருந்து விலகி,
அடக்கமாகவே இருந்து வந்திருக்கிறேன். "ஒரு செய்தித்தாளில் ’நிர்மா’வின்
பயணத்தைப் பற்றி நான் எழுதியே ஆக வேண்டுமா?"

நான் சிந்தித்தேன். ஆனால் பிறகு, இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில்
யாராவது ஒரு இளைஞன் இதைப் படிக்கலாம்; தூண்டுதல் பெறலாம்; 37
வருடங்களுக்கு முன்னர் நான் செய்ததைப் போல, எண்ணிப் பார்க்க முடியாததை
எண்ணலாம். அப்படி நிகழ்ந்தால், அதை விட மனநிறைவை வேறு என்ன அளிக்க
முடியும்? அதனால் தான் இது.

1969-ம் ஆண்டு நான் சோப்புத்தூள் தயாரிக்கத் தொடங்கினேன். அது ஒரு
சுவாரசியமான வருடம். மனிதன் நிலவில் கால் பதித்த வருடம்; பெலே தனது 1000-
வது ’கோல்’ போட்ட வருடம்; போயிங் 747 வானத்தில் முதல் முதலாக உலா வந்த
வருடம். அப்போது 22 வயதேயாகியிருந்த நான், வாழ்க்கையில் வெற்றியின்
தேடலில் திளைத்துக்கொண்டிருந்தேன்.

குஜராத் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமம் எனது. என் தந்தை ஒரு சிறு
விவசாயி. துன்பங்களுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால், எனது பெற்றோர்கள்
எங்களது கவனத்தைக் கல்வியிலேயே செலுத்த உதவினார்கள். கிராமத்துப்
பள்ளிக்கூடம் பல மைல்களுக்கு அப்பாலிருந்தபோதும், ஒரு நாளும்
போகாமலிருக்க அனுமதிக்கப்படவில்லை. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு,
பட்டப்படிப்புக்காக நான் அஹமதாபாத் நகருக்கு அனுப்பப் பட்டேன்.

பி.எஸ்.சி முடித்தபிறகு, குஜராத் மாநில அரசின் கனிமத் துறையில்
பரிசோதனக்கூட உதவியாளராகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வந்த
வருமானம் குடும்பத்துக்குப் போதாமல் இருந்தது. எனவே வேறு ஏதாவது
செய்யலாமே என்ற எண்ணத்தோடு, நான் சலவை சோப்புத்தூளை வீட்டிலேயே
தயாரிக்கத் தொடங்கினேன். எனது சைக்கிளில் ஒவ்வொரு வீடாக சென்று விற்பனை
செய்து வந்தேன். நம்பினால் நம்புங்கள்- அது ஒன்றும் அவ்வளது எளிதான
வேலையல்ல.

எல்லா வெற்றிகளும் எளிமையாகத் தான் துவங்குகின்றன. நானும் என் வீட்டின்
புறக்கொல்லையில் 100 சதுர அடி நிலத்தில் தான் தொடங்கினேன். என்னிடம்
இருந்ததெல்லாம் சோப்புத்தூள் தயாரிக்கத் தேவையான சில ரசாயனங்கள்,
கையாலேயே அவற்றைக் கலக்குவதற்கான வழிமுறைகள் பற்றிய அறிவு, இவற்றோடு
மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக முயன்று வென்று காட்ட வேண்டும் என்ற
துணிவு...!

எனது தயாரிப்பு புதுமையாக இருந்ததை உணர்ந்தேன். நான் உபயோகித்த
கச்சாப்பொருட்கள் வித்தியாசமானவை. அப்போது முன்னணியிலிருந்த
சோப்புத்தூள்களின் தரத்துக்கு ஈடு கொடுத்தபோதும், எனது தயாரிப்பு முறை
காரணமாக என்னால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிந்திருந்தது. பிற
சோப்புத்தூள்களோடு ஒப்பிடுகையில் அவற்றின் விலையில் மூன்றில் ஒரு பங்கு
விலையில் என்னால் விற்க முடிந்திருந்தது.

அந்தக் காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய இந்திய உற்பத்தியாளர்களே
இருக்க, சந்தையை பன்னாட்டு நிறுவனங்களே ஆக்கிரமித்து விட்டிருந்தனர்.
இருப்பதிலேயே மிக மலிவான சோப்புத்தூள் அப்போது ஒரு கிலோ ரூ.13-க்கு
விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. நான் எனது சோப்புத்தூளை ஒரு கிலோவுக்கு ரூ.
3-க்கு அறிமுகம் செய்தேன். உடனடியாக வெற்றியடைந்தேன்.

மெல்ல மெல்ல விற்பனை அதிகரிக்கவும், இதைப் பெரிய அளவில் செய்யலாமே என்று
உள்மனம் கூறியது. வட்வா என்ற ஒரு சிறிய கிராமத்தில், என் வீட்டின்
கொல்லைப்புறத்தில் இருந்த உற்பத்திக் களத்தை நான் அஹமதாபாத்தின்
தொழிற்பேட்டைக்கு இடம் பெயர்த்தேன். என் அருமை மகள் நிருபமாவின் பெயரையே,
’நிர்மா’ என்று எனது சோப்புத்தூளுக்கும் வைத்தேன்.

அது மிகப்பெரிய சவால் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனால், திரும்பிப்
பார்க்க மனமில்லை. கச்சாப்பொருட்கள் வாங்குவதிலிருந்து, அதைக் கலந்து,
விற்பனை செய்வது வரைக்கும் நானே ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் கடுமையாக
உழைத்தபடி செய்து கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு விற்பனையும் எனக்கு மிகுந்த மனநிறைவை
ஏற்படுத்திக்கொண்டிருந்ததால், இப்படிக் கண்மூடித்தனமாக உழைத்தது எனக்குப்
பெரிதாக இருக்கவில்லை. குறுகிய காலத்திலேயே ’நிர்மா’ உள்ளூர்
சந்தைக்குள்ளே ஊடுருவியது. நாடளாவிய சந்தையில் விற்பதற்கு எனது தயாரிப்பு
உகந்ததாகி விட்டிருந்தது. ஆனால், எனது கவனம் அது வரை புறக்கணிக்கப்பட்ட,
அதிக ஜனத்தொகை கொண்ட கிராமப்புறங்களின் மீதே இருந்தது. எங்களது விலையைத்
தக்க வைத்துக்கொள்வதே வர்த்தகத்தின் கோட்பாடக இருந்தது. அதிக அளவில்
இடைத்தரகர்களை வைத்துக்கொள்ளாமல், ஓரளவு நேர்கோட்டில் எங்களது
வினியோகமுறைகள் இருந்தன.

மெல்ல மெல்ல நிர்மா புதிய புதிய வாடிக்கையாளர்களை சென்று அடைந்தது.
வானொலிகளில் விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம்.

"வாஷிங் பவுடர் நிர்மா! வாஷிங் பவுடர் நிர்மா!! தூத் ஸி ஸஃபேதி நிர்மா ஸே
ஆயி!!" (பாலைப் போன்ற வெண்மை நிர்மாவால் வந்தது) என்ற விளம்பரப்பாட்டு
சரித்திரமானது. இது எனக்கு அளித்த தன்னம்பிக்கை அளவிட முடியாதது. ’பொருள்
உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், பணம் திருப்பித் தரப்படும்,’ என்று
அறிவித்தேன். அது எங்களது தயாரிப்பை இன்னும் பிரபலமாக்கியது. ’நிர்மா’
இந்தியாவின் பல பன்னாட்டு நிறுவனங்களின், பல ஆண்டுகாலமாகப்
பிரபலமாகியிருந்த தயாரிப்புக்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, முதல்
இடத்தை நோக்கி முந்தத் தொடங்கியது. எங்களது அபார வளர்ச்சி, அவர்களை
அவரவர் விலையைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளியது.

எங்களது வளர்ச்சி, பின்னாளில் தொழிற்கல்வி நிலையங்களிலும்,
கல்லூரிகளிலும் பாடத்தின் ஒரு பகுதியாக மாறும் என்பதெல்லாம் அப்போது
எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

நான் எப்போதுமே பேராசைக்காரனாக இருந்ததில்லை; ஆனால், கிடைத்த வாய்ப்பைத்
தவற விட்டதில்லை. அதுவே எனது வளர்ச்சிக்கு வித்திட்டது. போட்டியை
எப்போதுமே நான் அச்சுறுத்தலாகக் கருதியதில்லை. அவர்களது பலவீனங்களும்,
எனது பலங்களும் எனக்குத் தெரிந்திருந்தன. எவரும் அணுகாத
இடங்களுக்கெல்லாம் நான் போனேன். போகிற இடங்களெல்லாமே எனது
தயாரிப்புக்களுக்கு விற்பனைக்கூடங்களாக மாறின.

அது இந்தியாவில் ’லைசன்ஸ் ராஜ்.’ என்று கருதப்பட்ட கட்டுப்பாடுகள்
அதிகமாக இருந்த காலம். கச்சப்பொருட்கள் வாங்குவதிலிருந்து, போக்குவரத்து
வரைக்கும் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனால், ஒவ்வொரு சிக்கலும் என்னை
உள்ளத்தளவில் வலிமையாக்கியது. இடையிடையே சில முக்கியமான முடிவுகளை
மேற்கொண்டதும் எங்களது வளர்ச்சிக்கு வழி கோலியது. 1970-ல், Linear Alkyl
Benzene Sulphonate (Labsa) மற்றும் Sulfuric acid உற்பத்திக்காக
தொழிற்சாலைகளை அமைத்தேன். 1990-ல் கிளிசரின் தொழிற்சாலையும் உருவானது.
இதன் மூலம் உற்பத்தி செலவு பன்மடங்கு குறைந்தது.

1985-ல், மக்களால் பெரிதளவிலே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ’நிர்மா’ என்ற
அதே பேரில் சோப்புக்கட்டி உற்பத்தி தொடங்கினோம். அதன் பிறகு தொடர்ந்து பல
விரிவாக்கங்கள்.1990-ல், குளியல் சோப்பும் உற்பத்தி செய்யத் தொடங்கினோம்.
மலிவான விலையில் அழகு சோப்புகளை உருவாக்கினோம். இந்தியாவிலேயே இரண்டாவது
இடத்தையும் அடைந்தோம்.

1994-ல் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி பொட்டலங்கள் உற்பத்தி செய்யுமளவுக்கு
பெரிய தொழிற்சாலை உருவானது. அவற்றை வினியோகம் செய்யத் தேவையான
அட்டைப்பெட்டிகளையும், காகிதங்களையும் நாங்களே உற்பத்தி செய்யத்
தொடங்கினோம்.

1998-ல் வதோதரா நகருக்கு அருகே, அலிந்திரா என்ற இடத்தில், ஆண்டொன்றுக்கு
75,000 டன்கள் Linear Alkyl Benzene உற்பத்தி செய்யும் கொள்ளளவு கொண்ட
தொழிற்சாலையை நிறுவினோம். 2000-ல் பாவ்நகர் அருகே ஒரு soda ash
தொழிற்சாலையும் நிறுவினோம்.

நான் ஒருவன் மட்டுமே எளிமையாக ஆரம்பித்து இன்று 15,000 பேர்கள்
பணியாற்றுகிற அளவுக்கு பூதாகரமாக வளர்ச்சியடைந்திருப்பது நினைத்தாலே
வியப்பாக இருக்கிறது. வெற்றிக்குக் குறுக்கு வழிகள் இல்லை. வெற்றிக்கான
பாதையில் இடையூறுகள் நிறையவே இருக்கின்றன. ஆனால், மற்றவர்களிடமிருந்து
மாறுபட்டு இருக்க விரும்புகிறவர்களால், அவற்றை மீறி விட்டு வெற்றிபெற
முடியும்.

இப்போது நிர்மா குழுமம் பல நிறுவனங்களை வாங்கியபடி இருக்கிறது. எரிசக்தி
மற்றும் சிமெண்ட் உற்பத்தியிலும் ஈடுபட முயன்று கொண்டிருக்கிறோம்.

என் ஒருவனால் இவ்வளவு முடியும் என்கிறபோது, இன்றைக்கு என்னுடன் இருக்கிற
15,000 பேர்களும் மனம் வைத்தால், என்ன தான் முடியாது?

முடியாதது முயலாதது மட்டுமே!

கர்சன்பாய் கே.பட்டேல் - தலைவர்-நிர்மா

venugopalan.rengan@gmail.com

---------------------------------------------
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!

இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"

www.beyouths.co.cc
e m@il: beyouths@yahoo.com

இமெயில் குழுவில் இணைய...
உங்கள் அன்புக்கு நன்றி!
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...